வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (09:10 IST)

சுதீப்பை பாராட்டி ரஜினியை மட்டம் தட்டிய ராம்கோபால் வர்மா

பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா எப்போதும் சர்ச்சையான கருத்துகளுக்கு பெயர் போனவர். 


 

 
அவருக்கு நடிகர் ரஜினி மீது என்னதான் கோபமோ தெரியவில்லை. முன்பு ஒரு முறை நடிகர் அமிதாப்பச்சனுடன் ஒப்பிட்டு ரஜினியை மட்டம் தட்டினார். ரஜினி நடிக்கும் கதாபாத்திரங்களை அமிதாப் சிறப்பாக செய்ய முடியும். ஆனால், அமிதாப் ஏற்கும் கதாபாத்திரங்களை ரஜினி செய்ய முடியாது  என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்தார்.
 
இது ரஜினி ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஏராளமான ரஜினி ரசிகர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 
 
தற்போது கன்னட நடிகர் சுதீப்புடம் ரஜினியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம்  ‘கோட்டிபாபா 2’. தமிழில் ‘ முடிஞ்சா இவன பிடி’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 


 

 
இந்த படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராம்கோபால் வர்மா “கோட்டிபாபா 2 படம் பார்த்தேன். உங்கள் பெயரை கிச்சா சுதீப் என்பதை மாற்றி ரஜினி சுதீப் என்று மாற்றிக்கொள்ளுங்கள். ரஜினி ஒரே மாதிரியான வேடங்களில்தான் நடிப்பார். ஆனால், நீங்கள் ஆட்டோகிராப், ஈகா மற்றும் கோட்டிபாபா-2 ஆகிய படங்களில், உங்களின் பன்முகத்திறமையை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
 
கோட்டிபாபா 2 படத்தில் உங்கள் நடிப்பை காணும்போது, நடிகர் விஷ்ணு வர்தன் சிறியதாய் தெரிகிறார். இதை அவரின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை எனில் அவர்களும் கத்துக்குட்டிதான்.  தூங்கிக் கொண்டே உங்களால் ரோபா மாதிரியான படங்களில் நடிக்க முடியும். ஆனால், ரஜினியால் ஈகா மாதிரியான படங்களை கனவிலும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த கருத்து ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இதற்கு பதிலளித்த நடிகர் சுதீப் “ உங்களின் பாராட்டுக்கு நன்றி. ஆனால், விஷ்னுவர்தன் மற்றும் ரஜினி ஆகியோரின் அருகில் கூட என்னால் நெருங்க முடியாது. அவர்களை போன்ற பெரிய கலைஞர்களுடன் என்னை ஓப்பிடாதீர்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.