இயக்குனர் ஷங்கரின் சொத்து முடக்க விவகாரம்… ஆதரவாக வெளியான நீதிமன்ற உத்தரவு!
இயக்குனர் ஷங்கர் தற்போது தன்னுடைய திரைவாழ்க்கையின் மோசமான காலகட்டத்தில் உள்ளார். அடுத்தடுத்து அவர் இயக்கிய இந்தியன்2 மற்றும் கேம்சேஞ்சர் படங்கள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் அவரின் அடுத்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக திரைவட்டாரத்தினர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு இன்னொரு சிக்கலாக அவரின் 11 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்று சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன. அவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஆரூர் தமிழ்நாடன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு அமலாக்கத்துறையாலும் தனியாக விசாரிக்கப்பட்ட நிலையில் இப்போது ஷங்கரின் சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை.
இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் அவரது சொத்துகளை முடக்கியதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது நீதிமன்றம். மேலும் இந்த விவகாரம் சம்மந்தமாக அவர் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு ஏப்ரல் 21 ஆம் தேதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.