வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (08:48 IST)

அப்போ பேசியது இப்போ பாதிக்குது –இளையராஜா நிகழ்ச்சிக்கு மேலும் ஒரு முட்டுக்கட்டை …

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாவும் இளையராஜாவைக் கௌரவிக்கும் விதமாகவும்இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடக்க இருக்கிறது. இளையராஜாவுக்குப் பாராட்டு விழா என்று சொல்லப்பட்ட்டாலும் அதன் மூலம் வரும் 10 கோடி ரூபாய் வருமானத்தை வைத்தே காலியாக உள்ள தயாரிப்பாளர் சங்க கஜானாவை விஷால் நிரப்ப இருப்பதாக விஷாலின் போட்டியாளர்கள் கருதுகின்றனர்.

அப்படி அந்த இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்துவிட்டால் விஷாலுக்கு நற்பெயர் உருவாகி அடுத்த தேர்தலிலும் அவரே வெற்றி பெற்று விடுவார் என அஞ்சுகின்றனர். இதனால் இளையராஜா நிகழ்ச்சி நடைபெறக் கூடாது என மும்முரமாக வேலை செய்து வருகின்றனர்.எனவே அதைத் தடுக்க பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் இந்த இசை விழாவுக்கு எதிராக எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர் பி டி செல்வக்குமார் ஆகியோர் இளையராஜாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு இசைநிகழ்ச்சியைத் தடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

இப்படி விஷால் மூலமாக ஏற்கனவே பல பிரச்சனைகள் இருக்கும் நேரத்தில் இளையராஜாவின் மூலம் ஒருப் புதுப் பிரச்சனை முளைத்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று அங்கு பேசிய இளையராஜா ’கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நடைபெறுதல் உண்மையில்லை எனவும் ரமண மகரிஷி மட்டுமே இந்த உலகத்தில் தோன்றிய மனிதர்களில் உயிர்த்தெழுந்துள்ளார்’ எனக் கூறி சர்ச்சையினைக் கிளப்பினார். இது கிறிஸ்துவ மத நம்பிக்கையை அவமதிப்பதாக  உள்ளதாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சர்ச்சைக்குரிய விஷயம் நடந்து ஒருவருடம் கடந்த பின்பு இப்போது இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடையாக வந்துள்ளது. இளையராஜா மீது புகார் அளித்த அமைப்பை சேர்ந்த ஒருவர் இளையராஜா நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ இயக்கமான ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குப் புதிதாக ஒரு தடை உருவாகியுள்ளது. இதனால் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.