வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (00:06 IST)

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, “வாழை”திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25-வது நாளைக் கடந்திருக்கிறது. இப்படத்தைத் தமிழகமெங்கும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. 4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியினை படக்குழுவினர் கோலாகலமாகக் கொண்டாடினர். 
 
இந்நிகழ்வினில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 
 
இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ரெட்ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி, அர்ஜூன் துரை ஆகியோருக்கு வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.  
 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சார்பில் விழாவில் கலந்துகொண்ட பிரதீப் அவர்களுக்கு  வெற்றிக்கேடயம் வழங்கப்பட்டது.
 
ரெட்ஜெயன்ட் மூவிஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது….....
 
மாரி சார் ரெட்ஜெயன்ட் மூவிஸ்க்கு எப்போது ஸ்பெஷல், எங்களுக்கு மாமன்னன் எனும் மாபெரும் வெற்றியைத் தந்தார். இப்போது வாழை மூலம் மீண்டும் ஒரு வெற்றியைத் தந்துள்ளார். இந்தப்படத்தில் இணைந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியைத் தந்தது. படத்தில் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையைத் தந்திருந்தார், கலை, திவ்யா, நிகிலா, என எல்லோரும் அட்டகாசமாக நடித்திருந்தார்கள், அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.
 
நடிகர் கலையரசன் பேசியதாவது…....
 
இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் நன்றி. வாழை என் வாழ்வில் மிக முக்கியமான படம், இன்டஸ்ட்ரியிலிருந்து நிறையப் பேர் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டினார்கள், எல்லோர் மனதை பாதித்திருந்தால் தான் இந்த பாராட்டு வரும். முதல் நாளிலிருந்து அனைவரும் இப்படத்திற்கு, நேர்மையாகப் போட்ட உழைப்பு தான் இந்த வெற்றிக்குக் காரணம், அனைவருக்கும்  என் நன்றிகள். 
 
திலீப் சுப்பராயன் பேசியதாவது…...
 
ஆக்சன் மாஸ்டராக போய், தயாரிப்பாளராக மாறியது மிக நெகிழ்வான தருணம். மாரி சார் ரைட்டிங்க் எனக்கு ரொம்பப் பிடிக்கும், வாழை ஏன் மிக முக்கியம் என்றால், ஏற்கனவே ஒரு படம் செய்து தோற்றிருக்கிறோம், ஆனால் சினிமா தந்தது, என ஏற்றுக்கொண்டேன்,  ஆனால் அதுவே இப்போது எனக்கு வெற்றியைத் தந்துள்ளது. சினிமாவை நேசித்தால், அது திரும்பத் தரும். நவ்வி ஸ்டூடியோஸ், டிஸ்னி, ரெட்ஜெயன்ட் எல்லோருக்கும் நன்றி. மாரி சாருக்கு நன்றி. தெலுங்கில் ஒரு ஷூட்டில் படம் பார்த்த எல்லோரும் மனமுருகி இப்படத்தைப் பாராட்டினார்கள், பத்திரிக்கையாளர்கள் கொண்டாடினார்கள், அனைவருக்கும் என் நன்றிகள். 
 
நடிகை திவ்யா துரைசாமி பேசியதாவது…...
 
மிக நிறைவான விழாவில் இருக்கிறேன், புளூஸ்டார் படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நிறைவான விழா. மாரி சார் முதல் நாள், உன் கேரியரில், உனக்கு ஒரு நல்ல படம் தருவேன் என்றார். அவரை மட்டும் நம்பித்தான் இந்த படத்திற்குள் போனேன். அதனை நூறு சதவீதம் நிறைவேற்றி விட்டார். மிகப்பெரிய மகிழ்ச்சி. என்னுடன் உழைத்த கலைஞர்கள் நடிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 
 
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…...
 
பரியேறும் பெருமாளுக்குப் பிறகு வாழை படத்திற்கு, பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் எனக் கேட்டிருந்தேன். நீங்கள் மிகப்பெரும் ஆதரவைத் தந்துள்ளீர்கள் நன்றி, 2012 ல் ஃபிலிம்மேக்கராக ஆரம்பித்த ரஞ்சித், மாரி, நலன் என எல்லோரும் நல்ல படம் செய்து, மிகப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளார்கள். மகிழ்ச்சி. ஒரு நல்ல கதை, வசூலிலும் சாதிப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. வாழை என்னுடைய ஃபேவரைட் படங்களில் எப்போதும் இருக்கும், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி. 
 
நடிகை நிகிலா விமல் பேசியதாவது…...
 
பூங்கொடி பாத்திரத்தைத் தந்ததற்கு மாரி சாருக்கு நன்றி. மாரி சார் வாழக்கையை வாழ்வது கஷ்டம், ஆனால் அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் படமாகத் தந்துள்ளார், அதில் நானும் ஒரு பார்ட்டாக இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. எனக்கு அழகிய லைலா போலப் புகழ் கிடைப்பதை விட, பூங்கொடியைக் கொண்டாடுவது தான் மகிழ்ச்சி. ஹாட்ஸ்டார் உடன் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சி. திலீப் சுப்பராயன் மாஸ்டர் என் குடும்பம் மாதிரி, தமிழில் அவருடன் தான் நிறையப் படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த குடும்பத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றிகள். 
 
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது…..
 
என் சக தமிழ் திரைத்துறை தோழர்களுக்கு நன்றி. என் திரையுலகம் இந்த வாழை படத்தைக் கொண்டாடிய விதம், எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. திரைத்துறை இயக்குநர்கள், நண்பர்கள் தான் முதலில் இப்படத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தார்கள். நன்றி. நான் வேலை பார்த்த அனைத்து தயாரிப்பாளர்களும் கொடுத்த சுதந்திரம் தான் இந்த வெற்றிக்குக் காரணம், ரஞ்சித் சார், தாணு சார், ரெட்ஜெயன்ட், டிஸ்னி என நால்வருக்கும் என் நன்றிகள். திலீப் மாஸ்டர் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தாய் என்பார், ஆனால் ஃபைட்டில் நான் எப்போதும் உணர்வைக் காட்சிகளைச் சேர்த்து வைப்பேன், அதற்கான சுதந்திரம் தருவார். நான் படம் எடுப்பேன் அதில் ஃபைட் இருக்காது என்பார், அப்போதிருந்து அவரை நேசிக்க ஆரம்பித்து விட்டேன். வாழை பார்த்து நானும் இணைந்து செய்கிறேன் என்றார். அப்போதிலிருந்து இந்த பயணம் தொடர்கிறது. இந்த படத்தை நானே வெளியிடக் காரணம், ரெட்ஜெயன்ட் இருக்கிறது எனும் தைரியம் தான். செண்பக மூர்த்தி சார் படம் பார்த்து, உங்களுக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்கும் என வாழ்த்தினார். நன்றி. என் டீம் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர். அதை விட என் நடிகர்கள் மிகப்பெரிய உழைப்பைத் தந்தனர், அவர்கள் தான் இந்த வெற்றிக்குக் காரணம். கலையரசன், திவ்யா, நிகிலா விமல் எல்லோரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள். இந்த பையன்களை என்னவேணாலும் செய்ய வைக்க முடியும் எனத் தெரியும், ஆனால் நடிகர்கள் எப்படி ஒத்துக்கொண்டார்கள் என ஆச்சரியப்பட்டேன், நிறைய அவர்களைத் துன்புறுத்தியுள்ளேன், ஆனால் அதைப் புரிந்துகொண்டார்கள். நிகிலா விமலை முதலில், வேறு படத்திற்காகத் தான் தேர்ந்தெடுத்தேன், இது தான் என் வாழ்க்கையின் பெரிய படம் எனச் சொல்லி, நடிக்க வைத்தேன்.  ஏன் கிளைமாக்ஸில் டீச்சர் இல்லை என எல்லோரும் கேட்டார்கள்,  ஆனால் அப்போது அவரது டேட் இல்லை, இந்தப்படத்தை மொத்தமாக முடித்து விட்டு ஒன்றரை வருடம் கடந்து தான், கடைசி பாட்டை எடுத்தேன். இந்தப்படம் ஒரு முழுமை இல்லாமல் இருந்தது, படம் பார்ப்பவர்கள் என்ன உணர்வோடு செல்வார்கள் என நினைத்துத் தான் பாட்டை படமாக்கினேன். அப்போது சிவனைந்தன் டீச்சர் மடியில் படுத்து அழுவதாகத் தான் காட்சிகள் இருந்தது. அதை எடுத்திருந்தால் இப்போது வரும் சர்ச்சைகள் இருந்திருக்காது. என்னைப்பற்றி கேள்விகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான பதில் தான் வாழை படம். இன்னும் பல படங்கள் எடுத்துக்கொண்டே இருப்பேன், நான் வாழ்நாள் முழுதும் என் கதைகளைச் சொல்லிக்கொண்டே இருப்பேன் நான் ஓய்வு பெறும் போது, அடுத்துக் கதை சொல்ல ஆட்களைத் தயார் செய்திருப்பேன். அவர்கள் சொல்ல ஆரம்பிப்பார்கள். நீ ஏன் வலியைச் சொல்கிறாய் ? பெருமை இல்லையா ? என்கிறார்கள். இதோ இந்த பசங்க தான் என் பெருமை. இன்னும் இன்னும் பல கதைகள் வரும். என் வாழ்க்கையைக் கலையாக மாற்றியிருக்கிறேன் இந்த கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன் நன்றி என்றார்.