வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2015 (05:04 IST)

இலங்கையில் ரகசிய சித்ரவதைக் கூடம் முழு விசாரணை தேவை: ராமதாஸ் கோரிக்கை

இலங்கையில் ரகசிய சித்ரவதைக் கூடம் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் காணாமல் போன ஈழத்தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஐநா குழுவின் விசாரணையில் முக்கிய தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தமிழகத்தை மட்டும் அல்ல உலகத்தையே கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
 
அதுஎன்னவென்றால், இலங்கை கிழக்கு மாநிலத்தில் உள்ள திரிகோணமலை மாவட்ட கடற்படை தளத்துக்கு உள்ளே ஒரு சித்ரவதைக் கூடம் ரகசியமாக செயல்பட்டு வந்தது என்று ஐநா குழு கண்டுபிடித்துள்ளது.
 
இலங்கைப் போர் முடிந்து ஓராண்டு வரை இந்த சித்ரவதைக் கூடம் செயல்பட்டு வந்ததாகவும், அங்கு ஏராளமானவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐநா குழுவே தெரிவித்துள்ளது.
 
ஐநா குழுவுக்கு மிகக் குறுகிய காலமே விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டதால், அக்குழு முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர போதிய நேரம் இல்லை. எனவே, இது குறித்து முழு விசாரணை நடத்த  வேண்டும் என்றும் அக்குழு கூறியுள்ளது.
 
இத்தகைய சித்ரவதைகளும்கூட ஒருவகை போர்க்குற்றமாக கருத வேண்டும். எனவே, இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய இந்தியா வலியுறுத்த வேண்டும்.
 
மேலும், இலங்கையில் செயல்பட்டு வந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சர்வதேச விசாரணைக் குழுவை அனுப்பி முழு விசாரணை நடத்த வேண்டும். இறுதியில் அக்குழு அளிக்கும அறிக்கையின்படி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.