வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குண்டலினி சக்தி எங்கே உள்ளது...? அதன் பலாபலன்கள் என்ன...?

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். 

தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு. அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி  ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும். 
 
நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே  முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம். பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும்.
 
மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை  வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்  கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.
 
ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான் சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை  பயனப்படும் குண்டலினியை அக்கினிகுண்டலினி என்பர். அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள். அதையும் தாண்டி  சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும்  குண்டலினியானது தோற்றம், நிலைபேறு, அழிவு என்கிற மூன்று நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே  செல்கிறது. அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.
 
யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி  சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால், காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,  செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.