1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தீயசக்திகளை நீக்கி நேர்மறை சக்திகளைப் பெறுவதற்கு என்ன செய்யவேண்டும்...?

வீட்டுக்குள் நல்ல சக்திகள் இருப்பதன் அறிகுறி லட்சுமி கடாட்சம் தான். யாருடைய வீட்டில் வறுமை இல்லாமல் நிறைந்த செல்வமும், பிணியில்லா ஆரோக்யமும், செய்தொழிலில் நிம்மதியும், வாழ்வில் முன்னேற்றமும், மனத்தில் அமைதியும் குடிகொண்டிருக்கிறதோ அவர்கள்  வீட்டில்தான்  நல்ல சக்திகளும் மஹாலஷ்மியும் இருப்பதாக சொல்வார்கள். 
நல்ல சக்திகள் நம்முடைய  நல்ல செயல்களிலிருந்து உருவாகுபவை என்றும் சொல்லலாம். குல தெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு, அதர்ம வழியில் செல்லாமை, ஜாதக ரீதியாக தோஷங்கள் ஏற்பட்டு துன்பத்தை அடைந்தாலும் இறைவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையால்  இவர்கள் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவார்கள்.
 
வறுமை, நீடித்த நோய், மன சோர்வு, தொழிலில் பின்னடைவும், குடும்பத்தில் சச்சரவு, அமைதியின்மை இவையெல்லாம் நெடுங்காலம் தொடரும் பட்சத்தில் வீட்டுக்குள் தீயசக்தியின் ஆதிக்கம் சிறிது சிறிதாக மேலோங்கி வருகிறது என்று அறியலாம். இதை  உணர்ந்துகொண்டாலும் அதிலிருந்து மீண்டு வர நினைத்தாலும் தீய சக்திகள் இக்குடும்பத்தினரை அடக்கி ஆளவே செய்யும். இத்தருணத்தில்  நம் மீது உண்டாகும் கண் திருஷ்டி, பொறாமை, சாபம், ஏவி விடும் மாந்திரீகம் மேலும் குடும்பத்தை நிலைகுலையவே செய்யும்.
இத்தகைய தீயசக்திகளை நீக்கி நேர்மறையான சக்தியை அதிகரிக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள் உண்டு. அன்றாடம் அதிகாலை  வாசலில் அகல்விளக்கு தீபம், பூஜையறையில் விளக்கேற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுங்கள். 
வாரந்தோறும் பூஜையறையைச் சுத்தப்படுத்தி மந்திரங்கள் ஜபித்து விளக்கேற்றி வழிபடுங்கள். வீடு முழுவதும் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை போட்டு புகையைப் பரப்புங்கள். 
 
மூலை முடுக்கில் இருக்கும் துஷ்ட சக்திகளும் மறைந்திருக்கும் பீடைகளும் ஓடி விடும். வாரம் ஒருமுறை வீட்டுக்குள் கோமியம் தெளியுங்கள். கோமியம் இல்லையென்றாலும் மஞ்சள் நீராவது தெளிப்பது நல்லது.
 
வீட்டை சுத்தம் செய்யும் போது தண்ணீரில் வாசனை திரவியங்களை சேர்த்து சுத்தம் செய்வதைவிட கல் உப்பை நீரில் சேர்த்து கரைந்ததும்  வீட்டை துடையுங்கள். எதிர்மறை சக்தியை ஒழிக்கும் ஆற்றலை பெற்றது மகாலஷ்மியின் வசிப்பிடமான உப்பு. 
 
வீட்டின் நுழைவாயிலில் கண்ணாடிக் கிண்ணத்தில் நீரை ஊற்றி எலுமிச்சையை போட்டு வைத்தால் வீட்டின் உள் இருக்கும் எதிர்மறை  சக்தியின் ஆற்றலை செயலிழக்க செய்யும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை எலுமிச்சையை மாற்றி வைக்கலாம்.
 
வருடத்துக்கு ஒரு முறையாவது கணபதி ஹோமம் செய்வது வீட்டுக்குள் இருக்கும் அனைத்து துஷ்ட சக்திகளையும் விரட்டி அடிக்கும். 
 
இயன்றவரை வீட்டில் தேவையற்ற பொருள்களைச் சேமிக்காதீர்கள். சமையலறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். வீட்டுக்குள் நல்ல சக்தியான நேர்மறை எண்ணங்களை வளர்த்துவிடுங்கள். இவ்வாறு செய்வதால் வாழ்க்கையை நிம்மதியாக கடப்பீர்கள்.