வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம் என்ன...?

திருவிளக்கின் சிறப்பு: திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம்  தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம்  செய்கின்றனர்.
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு - பீடை விலகும். வெள்ளி விளக்கு - திருமகள் அருள் கிடைக்கும். பஞ்ச லோக விளக்கு - தேவதை வசியம்  உண்டாகும். வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும். இரும்பு விளக்கு - சனி கிரக தோஷம் விலகும்.
 
தீபத்தை குளிர வைக்கும் முறை: பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக்  கூடாது.  இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே  இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
 
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி  பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.
 
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி  எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.


 
திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து,  தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.
 
தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர் “தீபமங்களஜோதீ நமோநம” என்று திருப்புகழில் பாடுகிறார்.
 
இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். 
 
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும்  வழிபாட்டுத் தத்துவம்.