வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

தமிழ் கடவுள் முருகனின் ஆறு முகங்கள்

பரமேசுவரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்திகைப் பெண்கள் என்னும் அறுவர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் ‘கார்த்திகேயன்’ என்று பெயர் வந்தது.
சிவபெருமானின் கண்களிலிருந்து வெளிவந்த ஆறு பொறிகள் ஆறுமுகங்களாக மாறியதால் ‘ஆறுமுகன்’ எனப் பெயர் பெற்றார். முதல் ஐந்து முகங்கள் பஞ்ச  பூதங்களைக் குறிக்கின்றன. ஆறாவது முகம் உயிருள்ள அனைத்து ஜீவன்களுக்குள் இருக்கும் ஆன்மாவைக் குறிக்கிறது. 
 
முருகன் அம்மையும் அப்பனுமாக இருப்பவன். ஆகையால், அம்மையின் ஒரு முகமும் அப்பனின் ஐந்து முகமும் சேர்ந்து ஆறுமுகமானான் என்று ஒரு  விளக்கம் உள்ளது. ஏறு மயிலேறி விளையாடும் முகம் ஒன்று, ஈசனுடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று, கோரும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று,  குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று, மாறுபட சூரரை வதைத்த முகம் ஒன்று, மற்றும் வள்ளியை மணம் புரிய வந்த முகம் ஒன்று என்று முருகப்  பெருமானே மொழிந்ததாக ஒரு விளக்கம் உள்ளது.
 
பக்தர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்ய ஒரு முகம், பக்தர்களின் அறியாமையை ஒழித்து அறிவை நிலைநிறுத்த ஒரு முகம், பக்தர்களின் ஆழ்மனதில்  புதைந்துள்ள எண்ணங்களை வெளிக்கொண்டுவர ஒரு முகம், யாக யக்யங்களைச் செய்யத் துணை புரிய ஒரு முகம், நல்லவர்களைக் காத்துத் தீயவர்களைத்  தண்டிக்க ஒரு முகம், மற்றும் பக்தர்களிடம் அன்பு என்ற சுடரை ஏற்றி இன்பத்தை நிலைநிறுத்த ஒரு முகம் என ஆறுமுகங்களுக்கும் தனித்தனியான  முக்கியத்துவம் உள்ளன.