நல்லதொரு வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே!
எப்படி இருக்கப் போகிறது இந்த சனிப்பெயர்ச்சி:
கிரகநிலை:
இதுவரை உங்களது தைரிய வீரிய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி சுக ஸ்தானத்திற்கு செல்கிறார். மூன்றாம் பார்வையால் ரண ருண ரோக ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் தொழில் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.
பலன்கள்:உடல் சோர்வு அதிகரிக்கலாம். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும். உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள்.
உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.
மூலம்:இந்த பெயர்ச்சியில் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.
பூராடம்:இந்த பெயர்ச்சியில் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
உத்திராடம் - 1:இந்த பெயர்ச்சியில் அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணம், காசுகள் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.
சிறப்பான கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்
அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
சொல்ல வேண்டிய மந்திரம்: ஓம் ஸ்ரீகுருப்யோ நம என்ற மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லவும்.
சிறப்பு பரிகாரம்: வியாழகிழமைதோறும் மூக்கடலையை உங்கள் கையால் மாலையாக கோர்த்து ஸ்ரீதக்ஷிணாமூர்த்திக்கு அணிவித்து வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.