வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி பற்றி தெரிந்து கொள்வோம்...!!

சப்த ரிஷிகளில் ஐந்தாவது ரிஷி ஜமதக்னி ஆவரார். பிருகுவின் வழித்தோன்றலான ஜமதக்கினி முனிவர், ரிசிக முனிவருக்கும், மன்னர் காதியின் மகள் சத்தியவதிக்கும் பிறந்தவர். 

ஜமதக்கினி என்பதற்கு நெருப்பு என பொருள்படும். வேதமனைத்தும் கற்ற ஜமதக்கினி, பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னர் மகளான ரேணுகாவை மணந்து, வசு, விஸ்வா வசு, பிருகத்யானு, பிருத்வான்கண்வர் மற்றும் பரசுராமர் ஆகிய ஐந்து குழந்தைகளின் தந்தையானார்.
 
ரேணுகா தன் பதிபக்தியின் மேன்மையால், நாள்தோறும் பச்சைக் களிமண் பானையில் ஆற்று நீரை எடுத்து வருவாள். ஒரு நாள் ஆற்றுக்குச் சென்று களிமண்  பானையில் நீர் எடுக்கையில், வானத்தில் தேரில் ஏறி வந்த அழகிய கந்தவர்களைக் கண்டு சில நொடிப் பொழுது வரை மயங்கினாள். இதனால் அவளது கற்புக்குக்  களங்கம் ஏற்பட்டதால், பச்சைக் களிமண் உடைந்தது. எனவே வீட்டிற்கு திரும்பாமல் ஆற்றங்கரையிலே ஜமதக்கினி முனிவரின் வருகைக்காகக் காத்திருந்தாள்.
 
ஆற்றங்கரையில் நடந்த நிகழ்வுகளை ஞானக்கண்ணால் உணர்ந்து, கோபமுற்ற ஜமதக்கினி முனிவர், ரேணுகாவை வெட்டிக் கொல்ல தன் மூத்த மகன்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் மறுக்கவே, அவர்களைக் கல்லாகப் போகும்படி சபித்தார். தன் கடைசி மகன் பரசுராமர்  முன்வந்து, தந்தையின் ஆணைக்கிணங்க, தனது தாயைக் கோடாரியால் வெட்டித் தலையைத் துண்டித்தார்.
 
பின்னர் அமைதியடைந்த ஜமதக்கினி, பரசுராமருக்கு வழங்கிய வரங்களின் படி ரேணுகாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடலுடன் இணைந்து உயிர் பெற்றாள். கல்லான மூத்த சகோதர்கள் மீண்டும் உயிர் பெற்றனர்.