1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

ஆறுமுகன் தோன்றிய தினத்தில் தோன்றிய நவசக்தி தேவியர்....!

சிவபெருமான் தம் நெற்றிக்கண் திறந்த பொறிகளில் தோன்றியவர்தன் ஆறுமுகன் என்பது நாம் அறிந்ததே. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெப்பம் தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை,  பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். 
ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம்  கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார். அம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணிய சரவணப்பொய்கையின் அருகில் தவமிருந்தனர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே  நேரத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.
 
அவர்களுள் மாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும்,  வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர  தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். 
 
வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழலாம் என்பது ஐதீகம்.