வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

பங்குனி உத்திர விரதத்தை எப்படி கடைபிடிப்பது....?

பங்குனி உத்திர விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். பங்குனி உத்திரம் என்பதால் விரதம் இருப்பவர்கள் முழு உபவாசம் இருக்கவேண்டும். ஆனால் வயதானவர்கள் மூன்று வேளை பழச்சாறு அருந்தலாம்.
எளிதில் செரிக்கக்கூடிய உணவை சிறிதளவில் எடுத்துக் கொள்ளலாம். பங்குனி உத்திரத்தன்று காலையில் ஸ்நான சங்கல்பம் செய்து கொண்டு விரதத்தை  தொடங்கி விட வேண்டும்.
 
மாலையில் பெருமாள் முருகன், சிவன்,கோவிலுக்கு சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். பெருமாள் தாயார் அபிஷேகம் பாருங்கள் மற்றும் சிவபெருமானுக்கும்,  உமையன்னைக்கும் அபிஷேக ஆராதனை பாருங்கள். வீட்டில் இருந்து கூட பூஜை செய்து தூப தீப நைவேத்தியங்களை செய்து சிறிய அளவில் முடிக்கலாம். 
 
இந்த விரதத்தால், விரைவில் திருமண யோகமும், செல்வச் செழிப்பும் உண்டாகும். பிறகு ஒரு ஸத் பிராம்மண தம்பதியினரை வீட்டிற்கு அழைத்து வந்து  அவர்களுக்கு பாத பூஜை செய்து தாம்பூலத்தில் புடவை, வேட்டி வைத்து தஷிணை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு போஜனம் அளிக்க வேண்டும். 
 
பெருமாள் தாயாரை திருமண கோலத்திலும் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் திருமணக்கோலத்திலும் மனதில் நினைத்து தியானம் செய்ய வேண்டும். அன்று இரவு முழுவதும் ஸ்ரீ ராமாயணம் மகாபாரதம் சிவபுராணம், ஸ்கந்தசஷ்டி கவசம் போன்றவற்றை படிக்கலாம். 
 
வயதானவர்களுக்கு மட்டும் துளசி தீர்த்தம், பால், மோர், இளநீர், தேன் இவற்றில் சிறிதளவு பருகலாம். கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி இரவில் பால், பழம் உண்டு படுக்கையில் படுக்காமல் தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும். மற்றவர்கள் முழு உபவாசம் இருக்க வேண்டும்.
 
மேலும், 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரத நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.