1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (14:41 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - மகரம்

உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் - சனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே. 13-04-2022 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் குரு பகவானின் பார்வை களத்திர  - பாக்கிய  - லாப ஸ்தானங்களின் மீது விழுகிறது.


இந்த குரு பெயர்ச்சியால் மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில்  இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.  ஆனால் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வீண் வம்புக்கு வழி வகுக்கும். எனவே கவனமாக இருக்கவும். மறதியால் முக்கிய விஷயங்களில்  தாமதம் ஏற்படலாம்.

உங்களின் செல்வாக்கு உயரத் தொடங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாகச் செய்து  குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்துபேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களின் நெருக்கடிகளைத்  தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள்.

குடும்பத்தினருடன் இனிமையான பயணங்களைச் செய்வீர்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களை  நடைமுறைப்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவீர்கள். வீட்டிற்கு பராமரிப்பு செலவுகளும், வாகனங்களை பழுது பார்க்கும் செலவுகளும்  உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் விமர்சனங்களை பெரிதுபடுத்தாமல் நடந்துகொள்வீர்கள். கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மன உளைச்சல் இல்லாமல் செய்யத் தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின்  ஆலோசனைகளுடன் முக்கிய விஷயங்களை செயல்படுத்தி குடும்பத்தில் அமைதி கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். வீண் வதந்தி, வீண் வம்பு இரண்டும்  வளராதவாறு இந்த ஆண்டு பார்த்துக்கொள்வது அவசியம்.

சிலருக்கு பல், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடினமாக உழைத்து வெற்றி  பெறுவீர்கள்.

பணம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த மந்த நிலை மாறும். புதிதாக பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். முதலீடு சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனம் தேவை.

உத்யோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.  திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றி  வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள்  அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வியாபாரிகள் இந்த ஆண்டில் எதிர்பார்த்த  லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும்  என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால்  தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால்  இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும்.  உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணிபுரியும் பெண்கள் தங்கள் கை சேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு. சமூகத்திலும் குடும்ப உறவினர்களிடமும் தகுந்த புகழ் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கிடும் யோகபலன்கள் உண்டாகும்.

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்  பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய  வேண்டாம். சிறந்த சாதனை படைத்து பாராட்டுகளும் விருதுகளும் பெறுவார்கள். சாகசங்கள் நிகழ்த்தி பரிசு பெறுவார்கள். மனம் ஆன்மிக வழியை அதிகம் நாடும். பேசும் வார்த்தைகளில் அனல் வீசும். நற்செயல்கள் செய்வதினால் புகழ் பலம் பெறுவீர்கள். வீடு கட்டும் வாய்ப்புகளும் வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.  

மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய  பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் சார்ந்த துறைகளில் மாணவர்கள் பணிபுரிவதற்கான தகுதியை பெறுவார்கள். பொதுவில் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயள் பலம் பெறும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.

உத்திராடம் - 2, 3, 4:
இந்த பெயர்ச்சியால் பணம் கையாளும் போது கவனத்துடன் இருப்பது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். குழந்தைகளின் கல்வி பற்றிய கவலை குறையும். எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்  உண்டாகும். மன குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும். உங்கள் பேச்சின் இனிமையால் எடுத்த காரியம் கைகூடும். சுப பலன்கள் உண்டாகும்.. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனால் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.

திருவோணம்:
இந்த பெயர்ச்சியால் தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

அவிட்டம் - 1, 2:
இந்த பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.. மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுவாரசியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளை அவர்களிடம் எடுத்துக் காட்டுவதன் மூலம் நல்ல வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். பொறுப்புகள் மாறும். அதிக கவனத்துடன் பொறுப்புகளை கையாள வேண்டும். மேலிடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் லம் ஸ்ரீகமலதாரிண்யை நம:”.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்மேற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6.