வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சனி பிரதோஷ பூஜையின்போது செய்யப்படும் அபிஷேகப்பொருட்களும் பலன்களும் !!

சனி பிரதோஷ நேரத்தில் சிவாலய வழிபாடு செய்தால் ஐந்து ஆண்டுகள் ஆலய வழிபாடு செய்த பலன் கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் ரிஷப தேவருக்கு அருகம்புல் மாலை அணிவித்தும் சிவப்பு அரிசி, நெய்விளக்கு வைத்தும் வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.

இன்று நாள் முழுக்க முழு விரதம் இருந்து, நீர் ஆகாரம் மட்டும் எடுத்து, மாலையில் பிரதோஷ வேளையில் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
 
பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
 
அவருடைய வாகனமான நந்திதேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காக  தரலாம். பின் அருகம்புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம்.
 
நந்திதேவரது தீபாராதனைக்கு பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள்  நீங்கி நன்மை உண்டாகும்.
 
பிரதோஷ பூஜையின்போது அபிஷேகப்பொருட்களால் விளையும் பலன்கள்:
 
பால் - நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - வளம் உண்டாகும்.
தேன் - இனிய சாரீரம் கிட்டும்.
பழங்கள் - விளைச்சல் பெருகும்.
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்.
நெய் - முக்தி பேறு கிட்டும்.
இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.
எண்ணெய் - சுகவாழ்வு.
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்.
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.