வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையார் சுழி போடுவது ஏன்?

எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கும் போதும் பிள்ளையார் சுழிபோட்டும், பிள்ளையார் வழிபாடு செய்தும் தொடங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உலகம் சிவமயம் என்பதை உணர்த்தும் விதத்தில் பிள்ளையார் சுழி போட்டு அதன் கீழ்  எழுதத்தொடங்குவார்கள். எல்லாவற்றையும் பிள்ளையார் கவனித்துக்கொள்வார் என்பது நம்பிக்கை.

 
ஓம் என்பதை பிரணவ மந்திரம் என்று இந்துகள் சொல்லுகிறார்கள். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முருகனையும், உ என்பது  பிள்ளையாரையும், ம் என்பது சிவசக்தியை குறிப்பதாகும்.

 
பிள்ளையாரின் யானைமுகம், துதிக்கை, கண்களையும் நோக்கினால் ஓம் என்ற பிரணவம் தெரியும். கோவில் கும்பாபிஷேகம் என்றால் கூட முதலில் கணபதி ஹோமம் வைப்பதுதான் வழக்கம்.
 
கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும், யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில்  பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ  தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும். மண்ணில் செய்து வைத்தாலும் வருவார். மஞ்சளில் செய்து  வைத்தாலும் வருவார்.