1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 11 ஜூலை 2016 (17:36 IST)

டாஸ்மாக்கை அகற்ற ஒப்பாரி வைத்த பெண்கள் : கரூரில் நூதன போராட்டம்

அரசு டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் நடத்திய  நூதன போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


 

 
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட முதன்மை ஆட்சியர் காக்கர்லா உஷா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரூர், மண்மங்கலம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை ஆகிய ஆறு தாலுக்காவிலிருந்து மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு மற்றும் விலையில்லா நலத்திட்டங்கள் குறித்த மனுக்களை கொடுத்தனர். 
 
அப்போது கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்காவிற்குட்பட்ட பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட கோட்டையார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையினால் அப்பகுதி பெண்கள் மிகவும் இழிவு படுத்தப்பட்டு வருவதாகவும், தினந்தோறும் குடிகாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, தங்கள் கணவர்களும் அந்த குடிக்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர் என்று கூறி ஏராளமான பெண்கள் மாவட்ட முதன்மை ஆட்சியர் காக்கர்லா உஷா விடம் மனு கொடுத்தனர். 


 

 
மேலும் இதுவரை 7 முறை குளித்தலையில் மனு கொடுத்துள்ளதாகவும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது மனு கொடுத்ததாகவும் அந்த பெண்கள் கூறினர். தங்கள் கிராமத்தை காக்க வேண்டுமென்று கண்ணீர் மல்க மனு கொடுத்த அவர்கள் அந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பே திடீரென்று ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த ஒப்பாரி போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நீடித்தது. பின்பு போலீஸார் சமரச பேச்சுவார்த்தையின்  அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.