வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 3 நவம்பர் 2016 (17:58 IST)

சுயநினைவோடுதான் ஜெ. கைரேகை வைக்கப்பட்டதா: கோர்ட்டுக்கு போன டிராஃபிக் ராமசாமி!

சுயநினைவோடுதான் ஜெ. கைரேகை வைக்கப்பட்டதா: கோர்ட்டுக்கு போன டிராஃபிக் ராமசாமி!

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருடைய கட்சி வேட்பாளர்களின் தேர்தல் சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்திருந்தார். இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பியது.


 
 
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் தாக்கல் செய்த படிவம் ஏ மற்றும் பி-யில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதிலாக கைரேகை இடம்பெற்றிருந்தது.
 
இதனை திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்த நிலையிலும் அதிமுக வேட்புமனுக்களை ஏற்றது தேர்தல் ஆணையம். இந்நிலையில் இந்த விவகாரத்தை சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி கோர்ட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
 
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் டிராஃபிக் ராமசாமி. அதில், கைரேகை என்பது அடிப்படைக் கல்வியறிவு இல்லாதவர்கள் செய்கிற ஒன்று. இப்போது வேட்புமனு படிவங்களில் ரேகை பதிந்துள்ள ஜெயலலிதா நன்கு படித்தவர்.
 
இதுவரை கையெழுத்து மட்டுமே போட்டு வந்தவருடைய கைரேகை திடீரென பதியப்பட்டுள்ளது பல சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த கைரேகை அவரது சுய நினைவுடன்தான் பதியப்பட்டுள்ளது என்பதை அதில் அத்தாட்சி வாக்குமூலமும், கையெழுத்தும் இட்ட மருத்துவர்கள் கூறவில்லை.
 
இதுவரை கையொழுத்திட்டவர் திடீரென கைரேகை போடுகிறார் என்றால் அதை வீடியோவாக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது தேர்தல் அதிகாரியின் முன்னிலையிலாவது அந்த ரேகைகள் பதியப்பட்டிருக்க வேண்டும்.
 
எனவே இது எதுவும் நம்பும்படியாக இல்லை. எனவே, இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.