1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (23:10 IST)

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:புள்ளி விவரங்களை அள்ளிவீசும் ராமதாஸ்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை:புள்ளி விவரங்களை அள்ளிவீசும் ராமதாஸ்

தமிழகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று பாமக தலைவர் ராமதாஸ் புள்ளிவிவரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் பொறியாளர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே பட்டினப்பாக்கத்தில் மற்றொரு கொடூரம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
 
வழிப்பறிக் கொள்ளை முயற்சியில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரும், முதியவர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
பட்டினப்பாக்கம் பகுதியில் கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து விட்டது.
 
இவை அனைத்துக்கும் காரணம் பட்டினப்பாக்கம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுக்கடை தான் என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாடியுள்ளனர்.
 
ஒரு பெண் முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பான சூழலில் வாழ்வது வழக்கம். ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டில் 6940 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை, 2012 ஆம் ஆண்டில் 7192 ஆகவும், 2013 ஆம் ஆண்டில் 7475 ஆகவும், 2014 ஆம் ஆண்டில் 7980 ஆகவும், 2015 ஆம் ஆண்டில் 8,000 ஆக அதிகரித்திருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 37,577 ஆகும்.
 
இவற்றில் பாலியல் சீண்டல்கள், வரதட்சனைக் கொடுமை, குடும்ப வன்முறை, பெண்களின் உறுப்புகளை சிதைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் அடங்கும். அதுமட்டுமின்றி, கடந்த 5 ஆண்டுகளில் 4637 பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
 
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் என்று கூறப்படும் பிகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கூட பெண்களுக்கு எதிராக இவ்வளவு அதிக குற்றங்கள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.