1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 23 அக்டோபர் 2014 (20:04 IST)

ஆசிரியர் காதலை மறுத்ததால் பள்ளி மாணவி தற்கொலை - காவல்துறை விசாரணை

வேலூர் அருகே பள்ளி ஆசிரியர் காதலை மறுத்ததால் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அரியான் வட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தாத்தா வீட்டில் தங்கி வக்கணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
 
இவர்களின் காதல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கண்டித்துள்ளனர். எனினும் பெற்றோரின் எச்சரிக்கையை மாணவியும், ஆசிரியரும் பொருட்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த ஆசிரியருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி மாலை பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பில் ஆசிரியருக்கு பிரியா தீபாவளி பரிசாக துணி வாங்கி கொடுத்துள்ளதாகவும், அதை ஆசிரியர் வாங்க மறுத்ததாகவும் தெரிகிறது.
 
இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியிலிருந்து வீட்டிற்கு சென்று தனது தாத்தாவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணம் குறித்து காவல்துறையினருக்கு தெரியப்படுத்தாமல் அன்றிரவே சடலத்தை எரித்துள்ளனர்.
 
இதுகுறித்து ஏலகிரி கிராம நிர்வாக அதிகார் நாகராஜன், ஜோலார்பேட்டை போலீசில், மாணவியின் சாவில் மர்மம் உள்ளதாக புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறை ஆய்வாளர் முருகேசன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் மாணவி, ஆசிரியருக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்துள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.