செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 மே 2020 (11:21 IST)

அரசு ஆசிரியர்கள் ஊர் திரும்ப உத்தரவு! – மாணவர்களையும் அழைத்து வர ஏற்பாடு!

ஜூன் மாதம் 10 வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பணிபுரியும் மாவட்டங்களுக்கு திரும்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம்  முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட சூழலில் ஜூன் மாதம் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேர்வுகளை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பாதுகாப்பாக நடத்த தமிழக அரசு தயாராகி வருகிறது.

அதன்படி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களை மூன்று நாட்கள் முன்னதாகவே விடுதிகளுக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.