1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (17:04 IST)

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் - தேர்தலையொட்டி புதிய அறிவிப்புகள் வெளியாகுமா..?

TN Assembly
பரபரப்பான அரசியல் சூழலில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை காலை சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
 
தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.  தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும் ஆளுநர் படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14–ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 15–ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
 
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் நாளை  காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம்தென்னரசு தாக்கல் செய்கிறார். நாளை மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கையைஅமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்யவுள்ளார்.
 
கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து துறைகள்தோறும் மானியகோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று, துறைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு வரும் மார்ச் மாதம் மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டால், நடத்தை விதிகள் அமலாகிவிடும். அதன்பின் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவோ, செயல்படுத்தவோ இயலாது. எனவே, தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 
அதன்படியே, இந்தாண்டு பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வரும் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளையும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.