ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (20:33 IST)

உடல் நலம் தேறி வருகிறார் ராம்குமார் : போலீசாரிடம் வாக்குமூலம்?

சுவாதி கொலையில் கைது செய்ய முயன்றபோது, பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்ட கொலையாளி ராம்குமாரின் உடல்நலம் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை படுகொலை செய்த ராம்குமாரை, அவரது சொந்த  ஊரான செங்கோட்டை மீனாட்சி புரத்தில் போலீசார் பிடிக்க முயன்ற போது, வீட்டிலிருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
 
இதையடுத்து, போலீசார் உடனடியாக ராம்குமாரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதல் கட்ட சிகிச்சை முடிந்த பின்னர் மேல் சிகிச்சைக்காக 12:50 மணியளவில் தென்காசியில் இருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
1:40 மணிக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அதிகாலை 3:15 மணியளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் காலை 5 மணிக்கு ராம்குமார் வேறு அறைக்கு மாற்றப்பட்டார். 
 
பின்னர் அவரிடம் பேசிய காவல் துறை வாக்குமூலம் வாங்கியதாகவும், தான் சுவாதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளிவந்தன. 
அவர் இன்னும் ஓரிரு நாட்களில் பூரண குணமடைவார். அப்போது அவர் வழக்கம் போல் பேசுவார் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில் ராம்குமார் உடல் நலம் தேறி வருகிறார் என்று தற்போது மருத்துவர்கள் கூறினர். 
 
இருப்பினும், அவர் மெதுவாக போலீசாரிடம் பேசி வருவதாகவும், வாக்குமூலம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.