1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (11:02 IST)

புதுச்சேரியில் பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் பிளஸ்2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புதுவை சிறப்பு நீதிமன்றம்.என்ஜினீயரிங் மாணவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 


 
கடந்த 2013ஆம் ஆண்டு புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவியை காரில் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து திருபுவனை காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். 
 
இந்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் புதுச்சேரி மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், அந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பின்னர், சிபிஐ நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூரை அடுத்த காந்தி குப்பத்தை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் முத்துகுமார் (வயது 27), அவரது நண்பர் என்ஜினீயரிங் மாணவர் வெங்கடாஜலபதி (25) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
 
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்து,  சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பஸ் கண்டக்டர் முத்துக்குமார், என்ஜினீயரிங் மாணவர் வெங்கடாஜலபதி ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம் 363ன் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.