1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 மே 2020 (16:21 IST)

மது ஆலைகளை மூட திமுகவினர் தயாரா? அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு அனுமதித்த நிலையில் இந்த தளர்வுகளை பயன்படுத்தி ஒரு சில கடைகளை திறக்க தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று முதல் சென்னை தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளையும் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதனையும் நடத்தி வைத்தது 
 
இந்த நிலையில் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு அதிமுகவின் கூட்டணி கட்சிகளான தேமுதிக, பாமக போன்ற கட்சிகளும், திமுக உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அவரவர் வீட்டின் முன்பு இன்று காலை கருப்புச்சட்டை அணிந்து கருப்பு பேட்ஜ் அணிந்து டாஸ்மார்க் கடை திறப்பதற்கு கண்டனம் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக மது எதிர்ப்பு என்ற நாடகத்தை நடத்துவதாகவும் மதுக்கடைகளை திறப்பது திமுகதான் காரணம் என்றும் தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜு இதுகுறித்து கூறியபோது ’மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூட தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என திமுக நினைக்கிறது’ என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த கேள்வியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்லூர் ராஜூவின் சவாலை ஏற்று திமுகவினர் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்