வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (10:57 IST)

சசிகலாவுடன் ரகசிய மீட்டிங்: குஷியான 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள்

தகுதிநீக்க எம்.எல்.ஏக்களின் நிலுவை சம்பளத் தொகையை தினகரன் அளித்துள்ளதால் எம்.எல்.ஏக்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2017 செப்டம்பர் மாதம் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, சபாநாயகர் தனபால் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் தகுதிநீக்கம் செல்லும் என்றும் மற்றொருவர் தகுதிநீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்தனர். இதனால் இந்த வழக்கில் மூன்றாவதாக சத்தியநாராயணன் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டார். 
பல்வேறு கட்டங்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த அக்டோபர் மாதம் 25ந் தேதி வெளியானது. அதில் நீதிபதி சத்தியநாராயணன் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார். இதனால் அதிமுக தரப்பு நிம்மதி மூச்சு விட்டது.
 
இதையடுத்து இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என கூறிய தினகரன் தரப்பு 18 எம்.எல்.ஏக்களும், பிறகு தேர்தலை சந்திக்கிறோம் என கூறினர்.
 
இது ஒருபுறம் இருக்க இது அனைத்தையும் அவர்கள் செய்ததற்கு முக்கிய காரணம் சசிகலாவும் தினகரனும் தான். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே ஆளும் அதிமுக ஆட்சியை எதிர்த்து வந்தனர். 
 
தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று ஒரு வருடமாக காத்திருந்த எம்.எல்.ஏக்களுக்கு ஏமாற்றமே மிச்சம். ஒரு பக்கம் பதவி பறிபோக மற்றொரு பக்கம் 14 மாதங்களின் சம்பளமும், கிம்பளமும் பறிபோனது. இதனால் அவர்கள் மிகுந்த வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை தினகரன் உட்பட 18 தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் சந்தித்தனர். அப்போது தினகரனை தனியாக அழைத்த சசிகலா, 18 எம்.எல்.ஏக்களும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். இப்பொழுது அவர்களை கவனிக்காமல் விட்டால் அவர்கள் கட்சி மாற வாய்ப்பிருக்கிறது. ஆகவே அவர்களின் 14 மாத சம்பளத்தையும் மற்றும் கிம்பளத்தையும் அவர்களுக்கு கொடுக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனால் 18 எம்.எல்.ஏக்களும் குஷியில் உள்ளதாக தெரிகிறது.