1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2017 (18:21 IST)

சசிகலாவிற்கு எதிர்ப்பு: பேனரை கிழித்த மர்ம நபர்கள்

டிஜிட்டல் பேனரில் இடம்பெற்றிருந்த சசிகலா படத்தை மர்ம நபர்கள் கிழித்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியினை ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி ஏற்றுக் கொண்டார்.

அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றதை தொடர்ந்து அவரே முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும், அதிமுக நிர்வாகிகள் சிலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலாவிற்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறார். இதனையடுத்து, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் ‘ஜெயலலிதா தீபா பேரவை’ என்ற பெயரில் புதிதாக கட்சித் தொடங்கியும் வருகின்றனர்.

இந்நிலையில், ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை வாழ்த்தி அவரது படத்துடன் டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அந்த பேனரில் இருந்த சசிகலா படத்தை மர்ம நபர்கள் கிழித்துள்ளனர்.

ஏற்கனவே, அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்றபோது, ஆலங்குளத்தில் நடந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததும் குறிப்பிடத்தக்கது.