1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2020 (15:41 IST)

யாரையும் பெரியாள் ஆக்க வேண்டாம்: முருக பக்தர்களுக்கு லாரன்ஸ் டிவிட்!

கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக டிவிட்டர் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். 
 
சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் கந்தகஷ்டி கவசத்தில் இடம்பெற்று ஒருசில வார்த்தைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது முருகன் பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 
 
அருவருப்பாகவும் ஆபாசமாகவும் அவர் செய்த விமர்சனம் இந்து மத ஆதரவாளர்களை குறிப்பாக முருக பக்தர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இது குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அந்த யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், அனைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம், நான் உங்கள் அனைவருடனும் ஒரு கருத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தினமும் கந்தசஷ்டி கவசத்தை கேட்டு வளர்ந்தவன் நான். 
 
என் அம்மா அதை தினமும் என்னிடம் காலையில் படித்துக் காட்டுவார். அதன் சக்தியை நான் உணர்ந்துள்ளேன். கந்தசஷ்டி கவசம் என்னைப் பாதுகாத்த ஒரு கேடயம் என்பதை நான் நம்புகிறேன். என் வீட்டில் உள்ள முருகன் சிலையை நான் தினமும் வணங்குவேன்.
 
நான் இதை எதற்காக சொல்கிறேன் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் அதை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசி யாரையும் பெரிய ஆளாக மாற்ற வேண்டாம். அனைத்திற்கும் காலம் பதிலளிக்கும் என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.