1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 27 ஜனவரி 2019 (15:00 IST)

கூட்டணிப் பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை – பாமக ராமதாஸ் விளக்கம் !

பா.ம.க வின் நிறூவனரான மருத்துவர் ராமதாஸ் இன்னும் பாமகக் கூட்டணி குறித்த எந்த முடுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறியுள்ளார்.

விரைவில் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைய இருக்கிறது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. மேலும் இதில் காங்கிரஸுடன் கமலின் மக்கள் நீதி மய்யமும் தொகுதி உள் பங்கீடு செய்து கூட்டணியில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேப்போல மறுபக்கம் அதிமுக, பாஜக இணைந்த ஒரு கூட்டணி உருவாவதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்துள்ளன. இக்கட்சிகளை சார்ந்தவர்கள் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களைப் பேசி வருவதாகவும் எல்லாம் சரியாக அமைந்தால் விரைவில் கூட்டணிப் பற்றிய அறிவிப்பு வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தக் கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகள் இணையவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கூட்டணியைப் பலப்படுத்த பாஜக, அதிமுக மற்றும் அமமுக ஆகியக் கட்சிகளை இணைக்க கடுமையாகப் போராடி வருகிறது.

ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் சேர்வது குறித்து பாமக வின் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரிடையே இரு வேறுபட்டக் கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ராமதாஸ் பாஜக பக்கம சென்று எம்.பி. சீட் வாங்கும்  முனைப்பில் இருக்க, அன்புமணியோ அடுத்ததாக காங்கிர்ஸ்தான் ஆட்சி அமைக்கப்போகிறது அதனால் திமுக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைமையோ பாமக வை இணைத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறது. அதனால் பாமக வால் இன்னும் தெளிவான முடுவெடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊடகங்களின் ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது முகநூலில் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘பாமக நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்க இருக்கும் கூட்டணி குறித்து முடிவெடுக் கும் அதிகாரம் பொதுக்குழு உறுப் பினர்களால் எனக்கு அளிக்கப் பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கவும் அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவும் இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ளன. இந்த விஷயத்தில் அவசரப்படுவதற்கோ, பதற்றப்படுவதற்கோ எந்தத் தேவையும் இல்லை. ஆனால் ஊடகங்கள் என்னைத் தவிர்த்து கட்சியின் மற்ற தலைவர் களை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் கூட்டணி பற்றி யூகங்களின் அடிப்படையில் கேள்விகளை எழுப்புகின்றன. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கூட்டணி குறித்து பாமக விரைவில் முடிவெடுக்கத்தான் போகிறது. தமிழகத்தின் உரிமைகளையும் மக்களையும் பாதுகாக்க எதை செய்ய வேண்டுமோ, அதை பாமக நிச்சயம் செய்யும்’ எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.