1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , வெள்ளி, 8 மார்ச் 2024 (07:55 IST)

2 வயது மகளை தீ வைத்துக் கொன்று, தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரத் தாய்

மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக் கார்த்திக். பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.
 
கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனா மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொன்று, தன் மீதும் கொடூரமாக தீ வைத்துக் கொண்டு கதறி உள்ளார்.
 
அதிகாலை தூக்கத்தில் இருந்த அக்கம்பக்கத்தினர் முருக பூபதி அலறல் சத்தம் கேட்டு பார்த்த போது, அதிர்ச்சி அடைந்து, போலீசார்க்குத் தகவல் தெரிவித்து உள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.எஸ்.காலனி போலீசார், 80 சதவீத காயத்துடன் உயிர்க்குப் போராடிய முருக பூபதியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
 
முதற்கட்ட விசாரணையில், கடுமையான சர்க்கரை நோயினால் முருகபூபதி அவதிப்பட்டு வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது.
 
வேறு எதுவும் காரணமா? எனப் போலீசார் விசாரிக்கின்றனர்.இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.