வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (15:35 IST)

ஆதாரம் காட்டினால் நான் பதவி விலக தயார்! ஸ்டாலின் தயாரா? – ஓபன் சவால் விட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி!

நகராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் இடமாற்றத்தில் அதிமுக அரசியல் செய்வதாக மு.க,.ஸ்டாலின் தெரிவித்த நிலையில் அமைச்சர் எஸ்,பி.வேலுமணி வெளிப்படையாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் ”அதிகாரிகள் இடமாற்றம் என்பது நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அதை வேறு சில சம்பவங்களோடு இணைத்து ஸ்டாலின்  அரசியல் செய்கிறார். நாலு சுவருக்குள் அமர்ந்து கொண்டு மனதில் பட்டதையெல்லாம் குற்றச்சாட்டுகளாக அடுக்கி அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் கீழ் மக்கள் நிறைவான வாழவை பெற்றிருப்பது கண்டு பொறுக்க முடியாமல் அவதூறுகளை பரப்பி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.

மேலும் “நகராட்சி நிர்வாகம் என்பது ஒரு மாநிலத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தாய் துறையாகும். பொது மக்களின் நலன் கருத்து அத்துறையில் சிறப்பாக செயல்படும் தகுதி வாய்ந்த நபர்களை மேலும் சில காலம் பதவியில் நீட்டிப்பது என்பது வழக்கமான ஒன்றுதான். திமுக ஆட்சிகாலத்திலும் இவ்வாறான பதவி நீட்டிப்புகளை செய்திருக்கிறார்கள்” என்று நீண்டதொரு அறிக்கையை வெளியிட்டுள்ள அவர் முடிவாக “என் மீது மு.க.ஸ்டாலின் சுமத்தும் குற்றசாட்டுகளை அவர் ஆதாரத்தோடு நிரூபித்தால் எனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கிய அதிமுக அமைப்பு செயலாளர் பதவி, கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் பதவிகளை துறந்து அரசியலை விட்டே விலக தயார்” என்று கூறியுள்ளார்.

அதேசமயம் “குற்றச்சாட்டுகளை மு.க.ஸ்டாலின் நிரூபிக்க தவறினால் அவர் திமுக தலைவர் மற்றும் எதிர்கட்சி தலைவர் பதவிகளை துறந்து விட்டு அரசியலை விட்டே விலக வேண்டும், இதற்கு அவர் தயாரா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இதனை நான் பலமுறை கேட்டும்  ஸ்டாலின் பதிலளிக்க தயங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சரின் இந்த வெளிப்படையான சவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை எழுப்பியுள்ளது.