1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (12:16 IST)

காதல் திருமணம்; ஆணவ கொலை செய்ய பஞ்சாயத்தில் முடிவு: திருச்சியில் பகீர்!

காதல் திருமணம்; ஆணவ கொலை செய்ய பஞ்சாயத்தில் முடிவு: திருச்சியில் பகீர்!

சாதி மாறி காதல் திருமணம் செய்யும் பிள்ளைகளை பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆணவ கொலை செய்யும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்தே வருகின்றன.


 
 
தர்மபுரி இளவரசன், உடுமைப்பேட்டை சங்கர், சேலம் கோகுல்ராஜ் என தமிழகம் பல ஆணவ கொலைகளை கண்டுவிட்டது. ஒருபக்கம் ஆணவ கொலைகளுக்கு எதிராக கூபாடு போட்டாலும், சாதிய வெறியர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காமல்தான் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் சாதி மாறி திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகள், தங்களை ஆணவ கொலை செய்ய ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
பூலாங்குலத்துப்பட்டி செட்டுயூரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த உமா (23) என்பவர் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த சத்யராஜ் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
 
காதலன் சத்தியராஜ் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் உமாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும், கடந்த 28-ஆம் தேதி வீட்டை எதிர்த்து மருதமனையில் திருமணம் செய்துள்ளனர்.
 
இதனையடுத்து, திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காதல் கணவர் சத்தியராஜுடன் வந்த உமா, தங்களை ஆணவக்கொலை செய்ய இருப்பதாக புகார் அளித்துள்ளனர். அதில், எனது காதல் திருமணத்தை பற்றி அறிந்த எனது குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர். ஊர்க் கூட்டம் நடத்தி, எங்களை ஆணவ கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.