1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (13:50 IST)

டாஸ்மாக் நண்பர்களிடம் காரை பறிகொடுத்த டிரைவர்! – சென்னை அருகே பரபரப்பு!

சென்னை கேளம்பாக்க அருகே டாஸ்மாக்கில் நண்பர்கள் போல பழகிய சிலர் டிரைவரின் காரை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர் கால்டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 13ம் தேதி இவர் கேளம்பாக்கம் – திருப்போரூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கே மது அருந்த வந்த மூவர் அவருடன் பழகி நண்பர்களாகியுள்ளனர்.

மது அருந்திவிட்டு கிளம்பியபோது தங்களை குறிப்பிட்ட இடத்தில் காரில் விட்டுவிடும்படி மூவரும் கேட்டுக் கொண்டதால் ரமேஷ்பாபு காரில் அவர்களை அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் திடீரென கத்தியை காட்டி மிரட்டிய மூவரும் ரமேஷ்பாபுவை இறக்கி விட்டுவிட்டு காரை கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீஸார் மூவரில் ஒருவரான ராகுல் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். இதையறித்த மற்ற இருவரும் காரை படூர் ரவுண்டானா அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். காரை மீட்டு ரமேஷ்பாபுவிடம் அளித்த போலீஸார் மற்ற இருவரை தேடி வருகின்றனர்.