ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம்: பொன்முடி விவகாரம் குறித்து கார்த்தி சிதமரம்..!
சைவம், வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடி சமீபத்தில் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவர் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைச்சர் பொன்முடி ஒரு பேராசிரியர். அவர் இந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது. என்னைப் பொருத்தவரை, முதல்வர் ஸ்டாலின் ஒரு நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆனால், அந்த நடவடிக்கை போதாது என்பது என்னைப் போல பலருடைய கருத்தாக உள்ளது. அந்த கருத்தில் ஒரு நியாயமும் உள்ளது.
இன்னும் கொஞ்சம் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கலாம். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், பொதுமேடைகளில் இத்தகைய கருத்துக்களை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டணி கட்சி தலைவர்களே வலியுறுத்தி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva