1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஏப்ரல் 2018 (12:26 IST)

தமிழக ஆட்சியாளர்களுக்கு தான் கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும்; கமல்ஹாசன்

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் கமல்ஹாசன் நேரில் சென்று பங்கேற்று உள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. 
இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 48வது நாளாக தொடருகிறது.
 
இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நேரில் சென்று பங்கேற்று உள்ளார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசிற்கு தான் ஸ்டெர்லைடுக்கு எதிராக மக்கள் போராடுவது கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்காவது கேட்கட்டும் என்றார். மேலும் தான் இங்கு சக மனிதராக வந்திருப்பதாகவும், ஓட்டு வேட்டைக்காக வரவில்லை என்றும் தெரிவித்தார்.