வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 20 ஜூன் 2016 (16:33 IST)

’பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா’ - ஸ்டாலின் காட்டம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா என்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. அதிமுக உறுப்பினர் செம்மலை தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். அப்போது, திமுக தலைவர் கருணாநிதி என்று பலமுறை குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முதலமைச்சரை ஜெயலலிதா என்று அழைக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.
 
தொடர்ந்து பேசிய செம்மலை, மீனவர் பிரச்சனை, கட்சத்தீவு பிரச்சனை, இலங்கை தமிழர் பிரச்சனையில் சில கருத்துக்களை முன் வைத்தார்.
 
அப்போது குறுக்கிட்டுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”1974ம் ஆண்டு கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தபோது, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கருணாநிதி கடிதம்  எழுதியுள்ளார்.
 
1974ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பிரதமருக்கும், கச்சத்தீவை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது” என்றார்.
 
மேலும், ”இலங்கை தமிழர் பிரச்சனையில் செம்மலை உண்மைக்கு மாறாக பேசுகிறார். போரின்போது பொதுமக்கள் உயிரிழப்பது இயல்புதான் எனக் குறிப்பிட்டவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியவர் ஜெயலலிதா” என்றார்.