திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (17:44 IST)

சுவாதி கொலையாளியை பிடித்த காவல்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு

தமிழகத்தையே அதிர வைத்த நுங்கம்பாக்கம் ரயில் நிலைய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் இன்று பிடித்தனர். விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளியை பிடித்த காவல் துறைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்துள்ளார்.


 
 
கடந்த மாதம் 24-ஆம் தேதி காலை 6:30 மணியளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு வேலைக்கு செல்ல ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் காத்திருந்த இளம்பெண் சுவாதியை அரிவாளால் வெட்டிய மர்ம நபர் தப்பியோடினார்.
 
இதனையடுத்து ரயில்வே காவல் துறையிடம் இருந்து இந்த வழக்கு தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டது. பல்வேறு இடங்களில் விசாரணை, பல்வேறு குழப்பங்கள் என குற்றவாளியை பிடிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.
 
தமிழகமே இந்த வழக்கை உற்றுநோக்கி கொண்டிருந்தது. கொலையாளி யார், வழக்கின் விசாரணை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று அதிரடி திருப்பமாக கொலையாளியை நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சி புரத்தில் காவல்துறை பிடித்தது. அப்போது குற்றவாளி தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
 
இந்நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக காவல்துறை சிறப்பு வாய்ந்த காவல்துறை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், குற்றவாளியை விரைந்து கண்டுபிடித்த காவல்துறைக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.