1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (09:12 IST)

சீன அதிபரின் ஆசையை நிறைவேற்றும் பிரதமர் மோடி!

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி அதன் பின் அங்கிருந்து அவர் சாலை வழியாக மகாபலிபுரம் செல்கிறார்.

சீன அதிபரின் சென்னை வருகையை அடுத்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பே இந்திய மற்றும் சீன அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பு மாமல்லபுரத்தில் தான் நடைபெற உள்ளது என்பதை முடிவு செய்தபின் சென்னை கிண்டியில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரத்திற்கு முதலில் ஹெலிகாப்டர்கள் செல்லத்தான் முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனை இரு நாட்டு அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர். அதனை அடுத்து ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது
 
இந்த நிலையில் திடீரென சீன அதிபர் சென்னையில் உள்ள சாலை வழியாகத்தான் தான் பயணம் செய்ய விரும்புவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனை சீன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவிக்க, அதன்பின் சில மாற்றங்கள் செய்யப்பட்டது 
 
அதன்பின் அவசர அவசரமாக மகாபலிபுரம் செல்லும் சாலை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு ஸ்பீடு பிரேக்கர்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டன. மேலும் சீன அதிபர் சென்னையில் தங்கும் இரண்டு நாட்களிலும் சென்னையில் பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்டுள்ளது 
 
சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஹெலிகாப்டரில் சென்றால் பார்த்து ரசிக்க முடியாது என்பதால் சாலை வழியாக செல்ல வேண்டும் என்பதே  சீன அதிபரின் ஆசை என்றும் அந்த ஆசையை பிரதமர் மோடியின் மத்திய அரசு நிறைவேற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது