1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (22:53 IST)

மரகன்றுகளின் கூண்டுகளை சட்டவிரோதமாக அகற்றியதால் பரபரப்பு.

karur
கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பாக கரூர் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மரகன்றுகளின் கூண்டுகளை சட்டவிரோதமாக அகற்றியதால் கரூரில் பரபரப்பு.
 
கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் சார்பாக கரூர் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகளின்  கூண்டுகளை சட்டவிரோதமாக அகற்றியது சம்பந்தமாக கரூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் மனு அளித்தனர்.
 
அந்த மனுவில் :
 
கரூர் எம் ஆர்.வி டிரஸ்ட் சார்பாக கரூர் நகரம் முழுவதும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மேற்படி டிரஸ்ட்டின் சார்பாக கடந்த 3 வருடங்களாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி மரக்கன்றுகளை ஆடு, மாடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தி விட கூடாது என்ற காரணத்தினால், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மரக்கன்றுகளுக்கு இரும்பு கம்பியால் அமைக்கப்பட்ட கூண்டு பொருத்தப்பட்டுள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எம் ஆர்.வி டிரஸ்ட் என்று பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றினர். அதேபோல ஒரு சில இரும்பு கூண்டுகளையும் அகற்றினர். இது சம்பந்தமாக மேற்படி டிரஸ்ட் சார்பாகவும் மற்றும் பொதுமக்கள் உரிய புகார் கொடுத்ததன் அடிப்படையில் மேற்படி கூண்டுகளும், பலகைகளும் மீண்டும் பொருத்தப்பட்டன.
 
இன்று, மேலே சொன்னது போல மீண்டும் மரக்கன்றுகளின் கூண்டுகளை சட்டவிரோதமாக அகற்றி உள்ளார்கள். இது சம்பந்தமாக மரக்கன்றுகள் அமைந்து இருக்கும் இடத்திற்கு அருகில் கடைகள் வைத்து இருப்பவர்களிடம் விசாரித்த போது கரூர் மாநகராட்சி ஊழியர்கள், மேற்படி கூண்டுகளை அகற்றியதாக தெரிவித்தனர்.
 
இதனை எங்களது அஇஅதிமுக கழக நிர்வாகிகளும், எம் ஆர்.வி டிரஸ்ட் உறுப்பினர்களும் பார்வையிட்ட போது கரூர் 80 அடி சாலை நுழைவாயில் உள்ள டீ கடைக்கு அருகில் உள்ள மரக்கன்று கூண்டினை மாநகராட்சி துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர் சேகர் ஆகியோர் அகற்ற முயற்சி செய்து கொண்டிருந்த போது, அதை தடுத்து, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மேற்படி நபர்கள் தகாத கெட்ட வார்த்தைகளால் எங்கள் கழக நிர்வாகிகளை திட்டியதோடு கரூர் மாநகரில் உள்ள மரக்கன்று கூண்டுகள் அனைத்தையும் அகற்ற போவதாகவும், உங்களால் முடிந்ததை பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி அந்த சாலை ஓரத்தில் இருந்த பல மரக்கன்று கூண்டுகளை அகற்றி விட்டனர். மேலும் துப்புரவு உதவி ஆய்வாளர் மதியழகன் தான் ஏற்கனவே மரக்கன்று கூண்டுகளில் பொருத்தி இருந்த பெயர் பலகைகளை எடுக்க சொன்னார் என்று துப்புரவு பணியாளர் சொன்னது தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
தற்பொழுது மீண்டும் அதே போல அராஜகமாக அனைத்து கூண்டுகளையும் அகற்றிவிட்டனர். இந்த சம்பவம் இன்று 16.06.2022 மதியம் சுமார் 4.30 மணியளவில் நடைபெற்றது. இது போன்ற செயல்களை தொடர்ச்சியாக செய்தவாறு உள்ளார்கள். இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் அனைத்தும் சேதமாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேற்படி சம்பவத்திற்காக, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மரக்கன்று கூண்டுகளை அகற்றாமல் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
 
உடன் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் விசிகே பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் கரிகாலன், மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், கரூர் மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல், கரூர் மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, கரூர் கிழக்கு பகுதி செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.