ஞாயிறு, 9 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 மார்ச் 2025 (09:01 IST)

இன்று மின்சார ரயில்கள் ரத்து.. சென்னை போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு..!

Electric Train
இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
 
 09.03.2025 அன்று சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர், கோடம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு, சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/செங்கல்பட்டிற்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் 09.03.2025 அன்று தாம்பரத்திலிருந்து பிராட்வேக்கு 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து பிராட்வேக்கு 20 பேருந்துகள் மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டிற்கு 5 பேருந்துகள் என 50 பேருந்துகள் கூடுதலாக மா.போ.கழகம் இயக்க உள்ளது.
 
மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சென்னை எழும்பூா் - கோடம்பாக்கம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) அதிகாலை 5.10 முதல் மாலை 4.10 மணி வரை நடைபெறவுள்ளன. இதனால் பணிகள் நடைபெறும் நேரங்களில் கடற்கரை - தாம்பரம் இடையே இயங்கும் மின்சார ரயில்கள் இரு மாா்க்கத்திலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
 
எனினும் பயணிகளின் வசதிக்காக மாா்ச் 9 அதிகாலை 4.10 முதல் மாலை 4.55 மணி வரை தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே இரு மாா்க்கத்திலும் 30 நிமிஷங்கள் இடைவெளியில் மொத்தம் 46 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.. 
 
Edited by Siva