செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 21 ஜூலை 2016 (12:42 IST)

தற்கொலைக்கு முயன்ற எஜமானை காப்பாற்றிய பாச நாய் : வாழப்பாடி அருகே ஆச்சர்யம்

தற்கொலைக்கு முயன்ற தனது எஜமானை, அவரின் செல்ல நாய், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காப்பாற்றிய ஆச்சரியம் சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி என்ற ஊரில் நடந்துள்ளது.


 

 
வாழப்பாடியில் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைத்தி படையாச்சி தெருவில் வசிப்பர் ரவிச்சந்திரன்(50). இவர் ஒரு கூலித் தொழிலாளி. இவர்  ‘பிஸி’  என்ற ஒரு செல்ல நாயை வளர்த்து வருகிறார். அவர் எங்கு சென்றாலும் பிஸி அவரின் பின்னாலேயே சென்றுவிடும்
 
இருதினங்களுக்கு முன்பு, ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவரை காணாமல் தவித்த நாய், மோப்ப சக்தியின் மூலம் அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டது. ஒரு கயிறு திரிக்கும் தொழிற்சாலையின் அருகே இருந்த எஜமானனை கண்ட பிஸி, மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்த படி அவரின் அருகே நின்று கொண்டது. 
 
குடும்ப பிரச்சனை காரணமாக, ரவிச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் இருந்துள்ளார். ஏதோ விபரீதம நடக்க இருப்பதை புரிந்த கொண்ட பிஸி, நேராக வீட்டிற்கு சென்று, அவரின் மகன் குமாரை(23) கத்தி எழுப்பியுள்ளது.
 
தூங்கிக் கொண்டிருந்த குமார் எழவில்லை. எனவே பிஸி, அவரின் சட்டையை தன் வாயால் கவ்வி இழுத்து அவரை மீண்டும் எழுப்பியுள்ளது. குமர் எழுந்து அமர்ந்துள்ளார். பிஸி குரைத்துக் கொண்டே அங்கிருந்து ஓடியுள்ளது. இதனால், பிஸி தன்னை எங்கோ அழைக்கிறது என்று புரிந்து கொண்ட குமார், நாயின் பின்னாலே சென்றுள்ளார்.
 
பிஸி நேராக ரவிச்சந்திரன் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. அப்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் இருந்தார். இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த குமார் அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
 
ரவிச்சந்திரனை காப்பாற்றிய பிஸிக்கு விருந்து வைத்து உபசரித்துள்ளனர் அக்குடும்பத்தினர். நாயின் புத்தி கூர்மையும், பாசத்தையும் கேள்வி பட்ட அப்பகுதி மக்கள், பிஸியை ஆச்சர்யமாக வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.