1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2015 (23:41 IST)

செப்டம்பர் 15: பல்லடத்தில் அண்ணா பிறந்த நாள் மாநாடு: வைகோ தகவல்

பேரறிஞர் அண்ணாவின் 107ஆவது பிறந்த நாள் விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடைபெறும் என மதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
திராவிட இயக்க நூற்றாண்டு விழா பேரறிஞர் அண்ணாவின் 107ஆவது பிறந்த நாள் விழா மாநாடு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறுகிறது.
 
இந்த மாநாட்டை முன்னிட்டு, திருச்சி மாநகர் தியாகச் செம்மல்கள் கீழப்பாமர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் தொடங்கி திருச்சி மாநகர், புறநகர், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் வழியாக 324 கி.மீ., தூரம் திராவிட இயக்க நூற்றாண்டுச் சுடர் ஏந்தி கல்லூரி மாணவர்கள் தொடர் ஓட்டமாக வருகிறார்கள். இந்த சுடரினை செப்டம்பர் 15 காலை 10 மணிக்கு மாநாட்டு மேடையில் நான் பெற்றுக்கொள்கிறேன்.
 
இந்த தொடர் ஓட்டத்தினை 2015 செப்டம்பர் 12 காலை 9 மணிக்கு ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் அ.கணேசமூர்த்தி தொடங்கி வைக்கிறார்.
 
மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் தலைமை வகிக்கின்றார். திருச்சி மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, புறநகர் மாவட்டப் பொறுப்பாளர் சேரன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மருத்துவர் ரொகையா மாலிக், மறுமலர்ச்சி மாணவர் மன்ற அமைப்பாளர் சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
 
கிராமியத் தென்றல் ஒரத்தநாடு கணேஷ் குழுவினரின் திராவிட லட்சிய பாடல் நிகழ்ச்சிகள் சுடர் ஓட்ட வழிதடம் முழுவதிலும் நடைபெறும். திராவிட இயக்கச் சாதனை துண்டு பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்படும். இந்த மாநாட்டிற்கு அனைவரும் வருகை தந்து பெருமை சேர்க்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.