வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (16:37 IST)

அக்னி நட்சத்திரம் மே 4இல் தொடக்கம்; வெயில் தாக்கம் உச்சகட்டத்தை தொட வாய்ப்பு

தமிழகத்தில் கோடையின் உச்சகட்ட வெயில் காலமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற மே4 ஆம்தேதி தொடங்குகிறது.
 

 
வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை காலம் என்பது பிப்ரவரியில் தொடங்கி ஜூன் 2ஆம் வாரம் வரை நீடிக்கிறது. இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதமே வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
 
மேலும் கடந்த மார்ச் 2ஆம் வாரத்தில் இருந்து தொடர்ந்து 100 டிகிரியை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. அதிகபட்சமாக 103 டிகிரியை கடந்து பதிவாகியுள்ளது. சில இடங்களில் அவ்வப்போது வெப்பச்சலன மழை பெய்தாலும் அது அன்றையதினம் கூட வெப்பத்தை குறைக்க உதவுவதில்லை.
 
தொடர் வெயில் காரணமாக அணைகள், குளங்களில் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. ஏற்கனவே பல குளங்கள் வற்றிவிட்டன. இதனால் சில பகுதிகளில் குடி நீர்த் தட்டுப்பாடு தலைதூக்கி வருகிறது.
 
இந்த நிலையில் வருகிற மே4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரிவெயில் தாக்க காலம் தொடங்குகிறது. இது மே 28ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்த 25 நாட்களும் வெயில் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்க வாய்ப்புள்ளது.