1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (09:18 IST)

செவாலியர் விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் : கமல் ஆடியோ பேச்சு

செவாலியர் விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் : கமல்ஹாசன்

திரைப்படத்துறையில் நடிகர் கமலின் பங்களிப்பை கவுரப்படுத்தும் விதமாக பிரான்ஸ் அரசின் கலாசார அமைச்சகம், அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. 


 

 
இந்த செவாலியர் விருது நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1995-ல் வழங்கப்பட்டது. அதையடுத்து அந்த பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கே கிடைத்துள்ளது. 
 
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் ஒரு ஆடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிப்பதாவது:
 
பிரெஞ்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியே விருதை, எனக்கு அளிக்க முன்வந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன், பணிவுற்று அவ்விருதை ஏற்கிறேன்.
 
அந்த விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வட நாட்டில் பாமரரையும் அறியச் செய்த சத்யஜீத்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். 
 
இச்செய்தியை, எனக்கு தெரிவித்த இந்திய பிரெஞ்சு தூதருக்கும் எனது நன்றி. இனி நான் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை உணர்கிறேன். கலை கடற்கரையில் கை மண் அளவு அள்ளிவிட்ட பெருமை எவ்வளவு சிறு பிள்ளை தனமானது என்பதை உணர்கிறேன். 
 
வயதில்லாமல் எப்போதும் ஆர்ப்பரிக்கும் கலை கடல், இத்தகைய தருணங்களில் கரை மோதி, என்போன்றோர் முகத்தில் தெளித்து பெருவச மயக்கம் கலைத்து, உதடும் நினைத்து உப்பிட்டு பெரும் நினைவை உணரச் செய்கிறது. 
 
இதுவரையிலான எனது கலைப்பயணம் தனி மனித பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கை தாங்கி எழுத்தும் கலையும் அறிவித்த பெரும் கூட்டத்துடனே நான் ஏற்ற யாத்திரை இது என்பதை உணர்கிறேன். 
 
அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள். 4 வயது முதல் என் கை பிடித்து படியேற்றி பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இந்த விருது அர்ப்பணம். 
 
என் பெற்றோர் இருந்து பார்க்க முடியாத குறையை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறு வெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது. நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன். 
 
என்று அவர் பேசியுள்ளார்.