செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:27 IST)

மறு தேர்தல் அல்லது ஜனாதிபதி ஆட்சி - அரவிந்த்சாமி கருத்து

தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், மறு தேர்தல் அல்லது ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகர் அரவிந்த்சாமி சமீப காலமாக சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு வேண்டி மாணவர்கள் போராட்டம் நடத்திய போது, தனது ஆதரவை தெரிவித்தார். தற்போது,  தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலாவிற்கு இடையே எழுந்துள்ள மோதலால் உருவாகியுள்ள, அசாதாரண சூழ்நிலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்து வருகிறார்.
 
சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்களை சிறை வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. அப்போது எம்.எல்.ஏக்களின் தொலைபேசி எண்களுக்கு தொடர்ச்சியாக தொகுதி மக்கள் தொடர்பு கொண்டு, சசிகலாவை ஆதரிக்க வேண்டாம் எனக்கூறினார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தங்கள் முடிவுகளை எடுக்கும் உரிமை எம்.எல்.ஏக்களுக்கு இருக்கிறது என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருந்தார். 
 
அதற்கு பதிலளித்திருந்த அர்விந்த் சாமி “ இதுபோன்ற அசாதாரண சூழலில் மக்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த விரும்புவார்கள். அது எந்த கருத்தாக இருந்தாலும் அதன்படி நீங்கள் நடந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையின்படி உங்களிடம் கருத்துகளைத் தெரிவித்திருக்கலாம்” என்று பதிவிட்டார்.
 
அதைத் தொடர்ந்து தற்போது ஒ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகியோர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அர்விந்த்சாமி “எம்.எல்.ஏக்கள் கடத்தப்படுவது,  தனிமைப் படுத்துவது தொடர்பாக புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில், வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாகும்? எனவே, ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான வழியாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.