நடிகர் சங்க கணக்குகளை ஒப்படைக்காத சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை : கார்த்திக்
சட்டப்படி நடவடிக்கை : கார்த்திக் எச்சரிக்கை
நடிகர் சங்க கணக்குகளை முறையாக ஒப்படைக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் சங்கத்தின் பொருளாலர் கார்த்தி கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில், ஏற்கனவே தலைவராக இருந்த சரத்குமார் தோல்வியடைந்தார். நடிகர் நாசர் தலைமையில் புதிய அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, நடிகர் சங்கம் தொடர்பான கணக்குகளை விரைவில் ஒப்படைப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் இது வரை முழுமையான கணக்கை சரத்குமார் ஒப்படைக்க வில்லை என்று தெரிகிறது. இது பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொருளாலரும் நடிகருமான கார்த்தி “நடிகர் சங்கத்தில் கணக்குகள் இதுவரை முறையாக ஒப்படைக்கப்படவில்லை. இதுபற்றி கேட்டு பல முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், இதுவரை பதில் ஏதும் வரவில்லை. கணக்குகள் முறையாக ஒப்படைக்கப்படவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் “எஸ்பிஐ சினிமாஸுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக ரத்தாகவில்லை. அந்த ஒப்பந்தத்தை ஏற்கனவே ரத்து செய்துவிட்டதாக சரத்குமர் கூறியது பொய். இப்போதுதான் நாங்கள் அந்த ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய்திருக்கிறோம்” என்று நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.