1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : வியாழன், 19 செப்டம்பர் 2019 (08:44 IST)

திருவள்ளூரில் ஒரே இரவில் 21 செமீ மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்த நிலையில் இன்று காலையிலும் தொடர்ச்சியாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது 
 
 
இந்த நிலையில் திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 21செமீ மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூரை அடுத்து பூண்டியில் 20 சென்டி மீட்டர் மழையும், திருத்தணி, தாமரைப்பாக்கத்தில் 15 சென்டி மீட்டரும், சோழவரத்தில் 13 சென்டிமீட்டர், திருவாலங்காட்டில் 12 சென்டிமீட்டர் மழையும் கொட்டி தீர்த்தது. அதேபோல் பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் தலா 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழை காரணமாக திருவள்ளூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
சென்னையின் குடிநீர் ஆதாரமாக இருந்துவரும் பூண்டி மற்றும் புழல் ஏரிகளிளும் மற்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. எனவே இந்த ஆண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னையில் சுவர் இடிந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார். சென்னை மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் பெண் தனது குடும்பத்தினர்களுடன் வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென மழை காரணமாக சுவர் இடிந்து உயிரிழந்தார்.