செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அனைத்து பாகங்களும் மருத்துவப்பயன் கொண்ட கண்டங்கத்திரி செடி !!

கண்டங்கத்திரி செடி முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக, பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில் காணப்படும். கண்டங்கத்திரி இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை.

கண்டங்கத்திரி பூக்கள் நீலநிறமானவை, 2 செ.மீ. நீளத்தில் சிறு கொத்துகளில் காணப்படும். கண்டங்கத்திரி செடியில் சிறு கத்தரிக்காய் வடிவமான காய்களும், மஞ்சள் நிறமான பழங்களும் உள்ளன.
 
கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.
 
கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி  பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.
 
பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். கண்டங்கத்திரி பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் கோழையகற்றும் பண்பிற்காக சேர்க்கப்படுகின்றது.
 
கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ளவேண்டும். அரை தேக்கரண்டி தூளுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள்  குணமாகும்.
 
கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம்  தீரும்.
 
கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.