வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளின் முக்கியத்துவம்...!!

நார்ச்சத்து என்பது மிக அதிகமாக பச்சைநிற காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயிறுகள் மற்றும் சில பழ வகைகளில் கிடைக்கிறது. இது பல வகையான மூலக்கூறுகள் கொண்ட எளிதில் ஜீரணிக்க முடியாத திடமான மாவுச்சத்து ஆகும்.
இதன் முக்கியமான தன்மை என்னவெனில், இதனை அவ்வளவு எளிதாக நமது இரைப்பை ஜீரணிக்க முடியாது. மேலும் இது உணவுப்  பொருட்களின் மீது உறைபோல படிந்து சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்துக்களை அவ்வளவு எளிதாக குடல் வழியே உறிஞ்சவிடுவதில்லை.
 
உணவுகளில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்கள், உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் சில இரசாயனப் பொருட்கள், சில நுண்கிருமிகள் போன்றவற்றை நார்ச்சத்து பிடித்து மலத்தில் வெளியேற்றுகிறது.
 
சர்க்கரை நோயாளிகளின் பின் விளைவுகளான கண் பாதிப்பு, இருதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள் போன்றவற்றையும்  வரவிடாமல் நார்ச்சத்து தடுக்கிறது.
 
உண்ணும் உணவில் உள்ள நார்ச்சத்து தான் இரத்தத்திலிருந்து சர்க்கரை எந்த அளவிற்குக் குறைக்கப்படுகிறது என்பதனைத் தீர்மானிக்கிறது.
 
நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும் உணவு முறையை கடைப்பிடிப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை எளிதில் தசைகளுக்கு சென்று, இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.
 
உணவில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரக்கும் அளவையும், இன்சுலின்  பயன்படும் அளவையும் முறைப்படுத்தும்.
 
அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் சிறிதளவு இன்சுலின் சுரந்தாலும் அது முழுமையாக பயன்பட ஏதுவாக அமையும். ஏனென்றால்  நார்ச்சத்தானது இன்சுலினைப் பயன்படுத்திக் கொள்ளும் ரிஸப்ட்டார்களின் திறனை அதிகப்படுத்துகிறது.
 
உணவு வகைகளில் நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அதன் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் குறையும். அதே போல் நார்ச்சத்து குறைவாக இருந்தால் சர்க்கரையை மிகைப்படுத்தும் திறன் அதிகமாகும்.