1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கொள்ளை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் !!

கொள்ளு ஒருவகை பயறு வகையாகும். இதற்கு கொள், காணம், முதிரை என்று  வேறு பல பெயர்களும் உண்டு. இது தட்டையாக பழுப்பு மற்றும் செம்மண் நிறத்திலும் காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் 'ஆர்ஸ் கிராம்' என்று பெயர். 

எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் உணவாக அளித்தனர். குதிரைகள் பல மைல் தூரம் தொடர்ந்து ஓடும் சக்தியை அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில்  இருந்து எடுத்து கொள்கிறது. 
 
கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு - ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு  அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது. கொள்ளில் அடங்கியுள்ள ஊட்டசத்துக்கள் கொள்ளில் புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து, மாவுசத்து, தாதுபொருள்கள், வைட்டமின்கள் போன்றவை மிகுதியாக நிறைந்துள்ளது.
 
கொள்ளை ரசமாக வைத்து சாப்பிட்டால் மிகுந்த நன்மை அளிக்கும் என சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளது. உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொண்டால் உடல் எடை குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.
 
கொள்ளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டால் நம் ரத்த அழுத்தம் சீரான அழுத்தத்தில் இருக்கும். மேலும் சிறுநீரகத்தில் கற்கள் சேரவிடாமல் தடுக்கும். ஜலதோஷம், இருமல், உடல்வலி சோர்வு போன்றவற்றை பெருமளவில் குறைக்கும் கொள்ளு, கடுமையான உடல் உழைப்பிற்க்கு பின் ஏற்படும் உடல் அயர்ச்சியையும் குறைக்கும்.
 
கொள்ளுப் பருப்பை நீரில் ஊற வைத்து, அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம், வறுத்தும் சாப்பிடலாம்.
 
கொள்ளை அரைத்து பொடி செய்து, ரசத்தில் பயன்படுத்தி வரலாம். சிலருக்கு வாயு பிரச்சனையால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். அவர்கள் கொள்ளை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி ஏற்படும்.